ஆதாமும் நியூட்டனும்
ஈர்ப்பு.
இருவரும் ஆப்பிளால் ஈர்க்கப் பட்டவர்கள் என்று படித்திருக்கிறோம்.
ஒருவருக்கு வேதம் சாட்சி.
இன்னொருவருக்கு விஞ்ஞானம் சாட்சி.
இருவருமே புரிந்து கொண்டது ஈர்ப்பைத்தான்.
நியூட்டன் புரிந்து கொண்டது பூமியைப் பற்றி.
ஆதாம் புரிந்து கொண்டது உடலைப் பற்றி.
இதில் ஆண், பெண் என்ற பேதத்துக்கு இடமில்லை.
ஆக மொத்தம் உடலுக்கே ஒரு ஈர்ப்பு உண்டு.
ஏனென்றால் உடல், பூமியின் மிகச் சிறிய வெளிப்பாடு.
பூமி உடலின்
மிகப் பெரிய வெளிப்பாடு.
பூமியில் உள்ள அத்தனையும் உடலில் உண்டு.
கல், மண் போன்ற எலும்பு,
தண்ணீர் போன்ற இரத்தம், உமிழ்நீர், வியர்வை.
நெருப்பாக உஷ்ணம்.
வாயுவாக சுவாசம்.
ஆகாயமாக மனம்.
இயற்கை பல வழிகளில் ஒரே உண்மையைத் தான் போதிக்கிறது.
எல்லாமே ஏதோ ஒரு பொருளில் ஈர்க்கப் படுகிறோம்.
எதுவுமே வேண்டாம் என்று போன புத்தரும் கூட துறவறத்தால் ஈர்க்கப்
பட்டார்.
ஒரு பொருள் மீது ஏற்படும் ஈர்ப்பின் வலிமை மட்டுமே
அதை அடையும் வழியைக் காட்டுகிறது.
அழகு கண்ணை ஈர்க்கிறது.
இனிய இசை காதை ஈர்க்கிறது.
மணம் நாசியை ஈர்க்கிறது.
சுவை நாவை ஈர்க்கிறது.
ஸ்பரிசம் உடலை ஈர்க்கிறது.
இத்தனை வழிகளில் உலகம் மனதை ஈர்க்கிறது.
ஒன்றை ஒன்று ஈர்ப்பதே இயற்கை.
ஈர்ப்பு என்பது ஒரு நியதி.
ஈர்ப்பு என்பது ஒரு நிகழ்வு.
ஈர்ப்பு என்பதே சக்தி.