ஒரு தூரிகையின் கதை
சும்மா இருப்பதற்கும் அசையாமல் இருப்பதற்கும் வித்தியாசம்
உண்டு.
அவள் வேலை சும்மா இருப்பதல்ல. அசையாமல் இருப்பது. அவள்
பெயர் தையல் நாயகி. இந்த மாதிரி பெயர்களை ஏன் இப்போது வைப்பதில்லை என்று நான்
யோசிப்பதுண்டு. தையல் என்றால் பெண் என்று ஒரு அர்த்தம் உண்டு. பெண்களுக்கெல்லாம்
நாயகி. என் அம்மா.
நான் படித்தது அரசுப் பள்ளியாக இருந்தாலும் அவ்வப்போது
கிழிக்கப்படும் நோட்டுப் புத்தகங்கள், உடைக்கப்படும் ஜாமன்ட்ரி பாக்ஸெல்லாம் கேட்டு
அழும்போது ஒவ்வொரு முறையும் திட்டிக்கொண்டே வாங்கித் தரும் அப்பா கூடவே வரும் போது
கூடவே ஒரு சாக்லேட்டும் வாங்கித் தருவார்.
அந்த உயரமான கட்டிடத்தின் கட்டுமானப்பணியில் இருந்தபோது
மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி எல்லோரும்
அழுது கொண்டிருந்தபோது நான்கு வயதுப் பையனாக நான் ஏன் இவர்கள் அழுகிறார்கள் என்று
புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
“அப்பா தூங்கிக்கிட்டிருக்காருப்பா...”
என்று யாரோ சொல்ல, விவரம் தெரியாத நான் பந்தை
எடுத்துக்கொண்டு மீண்டும் விளையாடப் போனது இன்னும் நினைவில் இருக்கிறது.
அன்று முதல் அம்மா வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.
கொஞ்சம் வளர்ந்தபின் கேட்டேன்.
“என்ன வேலைக்கிம்மா போறீங்க?...”
“சும்மா ஒக்கார்ற வேலைதான் சாமி...”
“சும்மா ஒக்கார்றதா வேலை?... அதுக்கா சம்பளம்
தர்றாங்க?...”
“தர்றாய்ங்களே...”
“சும்மாதான ஒக்காந்துருக்கீங்க... அப்புறம் ஏன்
உங்களுக்கு முதுகு வலி, இடுப்பு வலில்லாம் வருதுன்னு சொல்றீங்க?...”
அப்போது அவள் என்ன பதில் சொன்னாள் என்று தெரியவில்லை. வளர
வளரத் தெரிந்தது.
அம்மா சென்றது ஒரு ஓவியக்கல்லூரி. சுற்றிப் பத்துப்
பதினைந்து மாணவர்கள் தூரிகையில் அம்மா அழகான ஓவியமாகிக் கொண்டிருந்தாள்.
வகுப்பறையில் நாற்பத்தைந்து நிமிடங்கள் உட்கார்வதிலேயே
சலிப்பாகும் நான், அம்மா வெறித்துப் பார்த்தபடி மணிக்கணக்காய்
உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அடிமனதில் ஏதோ உறுத்தியது. சில நாட்களுக்குப் பின்,
“போதும்மா... நான்தான் ப்ளஸ் டூ வந்துட்டேன்ல...
நான் பார்ட் டைம்ல ஏதாவது வேலைக்குப் போறேன்... நீங்க தயவு செஞ்சு வீட்ல இருங்க...”
“முடியிற வரைக்கும் போகப்போறேன் சாமி...”
சொன்னாலும் கேட்கப்போவதில்லை.
இன்று காலை ஏதோ சீட்டுக் கட்ட பணம் கேட்டுவிட்டுப்
போனார்கள்.
“சாயங்காலம் நிச்சயமாக் குடுத்துர்றேங்க...”
என்று சொன்னாள்.
பள்ளி முடிந்து அந்த ஓவியக் கல்லூரிக்குச் சென்று
பார்த்தேன். ஒவ்வொரு மாணவர்களின் காகிதத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இருந்தாள்
அம்மா. அதில் ஒரு ஓவியம் மிகவும் அழகாக இருந்தது.
வரைந்து முடித்தார்கள்.
அம்மாவை அழைக்கச் சென்றேன்.
தொட்டேன்.
சரிந்தாள்.
அதுவரை
கண் திறந்திருந்தவள் கண் மூடினாள்.
அதன்பிறகு என்ன நடந்ததெல்லாம் கனவு போல் இருந்தது.
இறுதியில் கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் என் கையில் தந்த
பணமும், அம்மா கட்டியிருந்த சீட்டுப்பணமும் சேர்த்துக் கட்டிய தொகையில் இன்று
கல்லூரி வகுப்பறைக்குள் அமர்கிறேன்.
நான் இன்று அமர்வதற்காக, அவள் அத்தனை நாட்கள்
அமர்ந்திருக்கிறாள்.
அவள் சும்மா உட்கார வில்லை.
அசையாமல் உட்கார்ந்து அவள்
அன்று செய்தது தவம்
தவம் செய்தது அவள்.
வரம் எனக்கு.