பாரதியின் கனவு
அன்பு நிலைத்திடச் சொன்னாய் – நெஞ்சில்
அச்சம் தவிர்க்கவே பாடல் புனைந்தாய்
இன்பம் தருவிக்கும் சொல்லால் – நித்தம்
ஈதலும் காதலும் வேதமும் சொன்னாய்.
மானம் உயர்வெனச் சொன்னாய் – வீணில்
மாந்தரில் பேதங்கள் ஏனென்றுரைத்தே
கானம் பலவற்றைத் தந்தாய் – இன்றுன்
கானங்கள் ஊமைகளானது ஏனோ?
தாய்மொழி நேசிக்கச் சொன்னாய் – இன்று
செந்தமிழ் என்றொரு சுந்தர மொழியோ
வாய்வழிச் சேதியென்றாச்சு – தமிழ்
பேசுதல் கீழென்ற சூழலுண்டாச்சு
பள்ளித்தலமெங்கும் கோயில் – என்று
பாடிக் கனவுகள் கண்டதும் நீயே
அள்ளும் பணத்தினில் மட்டும் – பள்ளி
ஆலய உண்டியல் ஆனது ஏனோ?
மனிதர்க்கு உணவில்லை யென்றால் – அன்று
ஜகத்தினை அழித்திடப் பொங்கி யெழுந்தாய்
இனியந்தக் கோபங்கள் வேண்டாம் – ஜகம்
உழவின்றி உணவின்றி உயிரின்றிச் சாகும்.
மெச்சிப் புகழ்ந்திட்டபோதும் – அந்த
மொத்தக் கவிகளும் வீணாகலாச்சு.
துச்சமென்றே உந்தன் சொல்லை – மனிதர்
தூக்கி எறிந்தொரு நூற்றாண்டு ஆச்சு.
நல்லதோர் வீணை கிடைத்தே – அதன்
நரம்பினைக் கொய்திட்ட மக்களின் தேசம்
சொல்லடி சக்தி மாகாளி – இன்னும்
எத்தனை பாரதி வந்தால் திருந்தும்?...
No comments:
Post a Comment