Friday 12 December 2014

பாரதியின் கனவு

பாரதியின் கனவு

அன்பு நிலைத்திடச் சொன்னாய்நெஞ்சில்
     அச்சம் தவிர்க்கவே பாடல் புனைந்தாய்
இன்பம் தருவிக்கும் சொல்லால்நித்தம்
     ஈதலும் காதலும் வேதமும் சொன்னாய்.

மானம் உயர்வெனச் சொன்னாய்வீணில்
     மாந்தரில் பேதங்கள் ஏனென்றுரைத்தே
கானம் பலவற்றைத் தந்தாய்இன்றுன்
     கானங்கள் ஊமைகளானது ஏனோ?

தாய்மொழி நேசிக்கச் சொன்னாய்இன்று
     செந்தமிழ் என்றொரு சுந்தர மொழியோ
வாய்வழிச் சேதியென்றாச்சுதமிழ்
     பேசுதல் கீழென்ற சூழலுண்டாச்சு 

பள்ளித்தலமெங்கும் கோயில்என்று
     பாடிக் கனவுகள் கண்டதும் நீயே
அள்ளும் பணத்தினில் மட்டும்பள்ளி
     ஆலய உண்டியல் ஆனது ஏனோ?

மனிதர்க்கு உணவில்லை யென்றால்அன்று
     ஜகத்தினை அழித்திடப் பொங்கி யெழுந்தாய்
இனியந்தக் கோபங்கள் வேண்டாம்ஜகம்
     உழவின்றி உணவின்றி உயிரின்றிச் சாகும்.

மெச்சிப் புகழ்ந்திட்டபோதும்அந்த
     மொத்தக் கவிகளும் வீணாகலாச்சு.
துச்சமென்றே உந்தன் சொல்லைமனிதர்
     தூக்கி எறிந்தொரு நூற்றாண்டு ஆச்சு.


நல்லதோர் வீணை கிடைத்தேஅதன்
     நரம்பினைக் கொய்திட்ட மக்களின் தேசம்
சொல்லடி சக்தி மாகாளிஇன்னும்
     எத்தனை பாரதி வந்தால் திருந்தும்?...


No comments:

Post a Comment