Wednesday 28 January 2015

எத்தனை இரவுகள்


எத்தனை இரவுகள் கடந்துவிட்டோம் – நாம்
இரவுகள் சுகமென இருந்துவிட்டோம்..'
ரத்தமும் வேர்வையும் இழந்து பெற்றோம் – அந்த
யுத்தங்கள் யாவையும் மறந்து விட்டோம்...
அந்நியர் ஆட்சியைத் துரத்தி விட்டோம் – நம்
தாய்மண்ணில் அந்நியர் ஆகி விட்டோம்.
பெண்ணியம் பேசவே மேடையிட்டோம் – நாம்
மேடையில் மட்டுமே வேடமிட்டோம்
எத்தனை தத்துவம் சொல்லி விட்டோம் – அவை
மொத்தமும் ஓரமாய்த் தள்ளி விட்டோம்.
அத்தனை இரவுமே அடங்கட்டும் – இனி
அடுத்தொரு விடியல் தொடங்கட்டும்
கிழக்கினில் மட்டும் போதாது – நாம்
விழிக்கின்ற திசையெங்கும் விடியட்டும்.
உழைத்திடும் காலங்கள் நீளட்டும் - இனி
ஓய்வுகள் விடுமுறை காணட்டும்.
நடந்தது நடந்ததாய் இருக்கட்டும் – இனி
நடப்பவை நல்லதாய் இருக்கட்டும்.
கடந்தது காலமாக இருக்கட்டும் - இனி
படைப்பது சரித்திரமாக இருக்கட்டும்..!

No comments:

Post a Comment